ஞாயிறு, 31 மார்ச், 2013

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?



நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர்இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.
ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்” என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.
அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.
மீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.
அறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது?”
முத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது? என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்’
அறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்”
பின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்?”
அறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். ”என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை”
அறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்”
பின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?”
முத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..”
அறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை”


இப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்….”
முத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
முத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
அடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.
- பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.
இருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனநிலை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.
சரி, நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

100 ரூபாய்க்குள்.... எளிமையான வாட்டர் ஃப்யூரிஃபையர்!

சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். 
மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள். மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள்.

பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். 

இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது!

திங்கள், 25 மார்ச், 2013

விவேகானந்தர் பொன்மொழிகள்:-

1. எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி.
 

 2. மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.
 

3. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
 

 4. நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
 

5. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.
 

 6. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
 

7. நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.
 

8. உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.
 

 9. நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது.
 

10. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனை
 களைக் கடந்து செல்லவேண்டும்.

வியாழன், 14 மார்ச், 2013

மேற்கோள்கள் - பிரபாகரன்




  • உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள், உயர்ந்தவர்கள்.

  •  ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?

  •  அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடு!

  •  யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான் (சீருடை). அதனால்தான் எப்பொழுதும் இதிலேயே இருக்கிறேன்.

  •  உயிர் பறிக்கும் சயனைடுதான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்.

  •  இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!

  •  நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும்.

  •  ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்!

  •  தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது.

  •  தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கருணன். அவனை எப்பொழுதும் நினைப்பேன்.

  •  தமிழீழ இலட்சியத்திலிருந்து நான் பின்வாங்கினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்! 

மேதகு பிரபாகரன்

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம்...விவேகானந்தர் மேற்கோள்கள்



பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம்...
  • விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?

  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

  • எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

  • தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

  • பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

  • மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.

  • 'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

  • ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

  • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

  • நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.

  • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

  • இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

  • மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

  • நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறதுஎன்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

  • நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

  • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்
-- விவேகானந்தர் மேற்கோள்கள்